மட்டக்களப்பு-வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில், பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான, (60) வயதுடைய வெள்ளக்குட்டி றகுமத்தும்மா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனிமையில் வசித்து வந்த நிலையில் நேற்று (10) இரவு 10 மணியளவில் அவரது மகளின் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரது உறவினர்கள் இன்று (11) காலை வந்து பார்த்த பொழுது கதவு திறந்த நிலையில், வீட்டின் படுக்கை அறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதைக் கண்ட உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.