அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு வாய்ப்பு

1 co
1 co

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இது பற்றி ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு நாட்டிலுள்ள பத்து வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, இவ்வாறு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு சரியான முறையில் உணவை வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது, பேரணிகளை நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாதென அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து தினசரி நிலைமைகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.