திருமலையில் பெண்ணின் சடலம்: சிவில் பாதுகாப்புப் படை வீரர் கைது!

body3
body3

திருகோணமலை, கல்மெடியாவ பகுதியில் மலசலகூடக் குழிக்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் மலசல கூடத்துக்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த இந்திராணி வில்லவாணி (வயது 51) எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து கந்தளாய், வான் எல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தம்பலகாமம் பொலிஸாரினால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பெண்ணுடன் வசித்து வந்தார் எனவும், கடந்த 28 ஆம் திகதி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மண்வெட்டியால் குறித்த பெண்ணைத் தாக்கினார் எனவும், அவர் மரணமடைந்ததையடுத்து, மலசல கூடத்துக்காக வெட்டப்பட்ட குழிக்குள் சந்தேகநபர் சடலத்தை போட்டுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.