கல்விப் பிரச்சினைக்கான தீர்வு எங்களிடமே உண்டு! – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

GOVERNOR. Hon. Mrs. P. S. M. Charlesqq
GOVERNOR. Hon. Mrs. P. S. M. Charlesqq

“வடக்கு மாகாணத்தில் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறைக்கு அப்பால் துறைசார் வல்லுநர்கள் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இந்தநிலை மாறாதுவிடின் எமது சமுதாயத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடும்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“வடக்கு மாகாண கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு எம்மிடத்திலேயே உள்ள நிலையில் அது தொடர்பில் மத்திய அரசை நாட முடியாத சூழலில் இருக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நேற்று வவுனியா மாநகர சபை காலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார், வவுனியா வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளர்  திருமதி. அன்னமலர் சுரேந்திரன், வவுனியா தெற்கு வலயக்  கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன், பாடசாலை அதிபர்கள் உட்பட வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

இங்கு ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்றபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீண்டகாலமாக வலிகளோடும் வேதனைகளோடும் வாழ்கின்ற மக்களுக்குச் சேவையாற்றுகின்ற மிகப்பெரும் பணி எனக்கு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நமது மாகாணத்தில் கல்வித்திணைக்களத்தில் மட்டுமல்லாது ஏனைய திணைக்களங்களிலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இதற்குக் காரணம் தகுதிவாய்ந்த துறைசார் வல்லுநர்களை  உருவாக்க நமது மாகாணம் தவறியுள்ளமையே ஆகும்.

யுனிசெப் அறிக்கையின்படி கிராமப்புற மாணவர்களில் 85 முதல் 90 சதவீதம் வரை கல்வியை இடைநிறுத்தம் செய்கின்றார்கள். நகர்ப்புற மாணவர்களே சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கின்றார்கள். அதிலும் மிகக்குறைந்த மாணவர்களே விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களைக்  கற்கின்றார்கள். அதிலும் சொற்பமான மாணவர்களே பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வி கற்கின்றார்கள். நமது மாகாணத்தில் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை மட்டும் நிலவவில்லை; துறைசார் வல்லுநர்கள் பற்றாக்குறையும் நிலவுகின்றது.

இந்தநிலை மாறாதுவிடின் நமது சமுதாயத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடும். இதற்கான முழுத்தீர்வும் ஆசிரிய சமூகத்திடம் மாத்திரமே உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களையே முன்மாதிரிகளாகப் பார்க்கின்றார்கள. அதற்கான தகுதியுடன் ஆசிரியர்கள் செயற்பட வேண்டும். நமது பின்னடைவுக்கான காரணங்கள் நம்மிடம் இருக்க அதற்கான தீர்வை மத்திய அரசிடம் சென்று கோர முடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.

கல்விதான் இந்த மாகாணத்தின் அடித்தளம். கல்வி என்பது எழுத்தை மட்டுமல்ல வாழ்க்கையின் அத்துணை விடயங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். ஆகவே, பிரச்சினைகளை விரைவாகக் களைந்து  மாகாண மாணவர்கள் மற்றும் சமுதாய வளர்ச்சியில் ஆசிரியர்கள்தான் செயற்பட வேண்டும். மாகாணக்  கல்வி அமைச்சு மற்றும் திணைக்களத்துடன் இணைந்து முழு அர்ப்பணிப்போடும் ஊக்கத்தோடும் செயற்பட்டு வரவிருக்கும் பரீட்சைகளில் முன்னேற்றத்தை  ஏற்படுத்த வேண்டும். அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை நான் வழங்குவேன்” – என்றார்.