சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிடப்பட்ட மத வன்முறை – இலங்கை அரசின் நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டியது அமெரிக்கா

Pompeo2
Pompeo2

“இலங்கை அரசால் தொடர்ச்சியாக மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிப்பட்ட பாகுபாடு காண்பிக்கப்பட்டு வருவதுடன் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.” என்று சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை அரசு சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிடப்பட்ட பாகுபாட்டைக் காண்பிப்பதாக சிறுபான்மையின மதக்குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

சிறுபான்மையின மக்கள் மீது மத ரீதியாக முடுக்கிவிடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அரச அதிகாரிகளோ அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களோ பெருமளவில் அல்லது ழுமுமையாகவே அக்கறை காண்பிக்கவில்லை.

சிறுபான்மையினத்தவர் மற்றும் அவர்களது மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு மேற்படி இரு தரப்புக்களும் முயலவில்லை என்றும் சிவில் சமூக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன” – என்றுள்ளது.