சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க

DSC 0117

எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மூன்று தடவைகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் அனைவரும் கொரோன வைரஸ் தாக்கத்தின் எதிர்மறையை உறுதிப்படுத்தும் பி.சி.ஆர் சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விமான நிலையங்களில் பயணிகள் தரையிறங்கிய பின்னர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சோதனை முடிவுகள் அறியப்படும் வரை அனைத்து பயணிகளும் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கியிருக்கும்போது அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மேலும் இரண்டு தடவைகள் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சுற்றுலாத்துறை  அறிவித்துள்ளது.

மேலும் அவ்வாறு நாட்டுக்குவரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார அதிகாரிகளினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.