அஞ்சல் அலுவலக ஊழியர்களுக்கு 20வீத சம்பளத்தை குறைத்து வழங்க தீர்மானம்

DSC 0012

அஞ்சல் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் திறக்கப்பட்டாலும், அதன் ஊழியர்களுக்கு அன்றையதினம் மாத்திரம் 80 சதவீத சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தபால் திணைக்களம் நட்டத்தில் இயங்கிவரும் நிலையில் அதனை எதிர்கொள்வதற்காக சனிக்கிழமைகளில் அஞ்சல் அலுவலகங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “கொவிட்-19 வைரஸ் பரவலையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் தபால் திணைக்களத்தை நடத்திச்செல்வதிலும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தபால்சேவை ஊழியர்களின் ஊதியத்தில் குறைப்பைச் செய்யவேண்டிய நிலையேற்பட்டிருப்பதுடன், அது ஒரு நட்டத்தில் இயங்கும் திணைக்களமாகவும் மாறியிருக்கிறது.

எனவே, இந்நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்காக சனிக்கிழமைகளில் அஞ்சல் அலுவலகங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் அதனைத் தபால்சேவை ஊழியர்கள் தொழிற்சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்களின் ஊடாக சனிக்கிழமை அஞ்சல் அலுவலகங்களைத் திறக்குமாறும், எனினும் அன்றைய தினம் மாத்திரம் தமது சம்பளத்தில் 20 சதவீதக் குறைப்பைச் செய்யுமாறும் தொழிற்சங்கம் ஓர் உடன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நாடு முழுவதுமாக முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மருந்துப்பொருட்களை விநியோகிப்பது உள்ளிட்ட மிக முக்கியமான பணிகளில் தபால் திணைக்களமே செயற்திறனுடன் ஈடுபட்டது.

எனினும் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுடைய தொழிற்சங்கம் அரசாங்கத்தோடு இந்த இணக்கப்பாட்டிற்கு வந்திருப்பது உண்மையில் சிறந்ததாகும்.

அதேபோன்று, நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் வெளிநாடுகளிலிருந்து தமக்கு அனுப்பப்பட்ட பொதிகளை தபால் திணைக்களத்தினால் களவாடப்பட்டுவிட்டதாக அண்மையில் பல்வேறு தரப்பிராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சுமார் 42,000 பொதிகள் தபால் திணைக்களத்திற்கு வந்தன. எனினும் விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமையின் காரணமாக அவை கப்பல் மூலமாகவே நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

எனவே ஈரப்பதன் காரணமாக பொதிகளில் எழுதப்பட்ட முகவரிகள் தெளிவின்றி அழிந்துபோய்விட்டன. தற்போது அவற்றின் இலத்திரனியல் குறியீட்டு இலக்கத்தின் ஊடாகப் பொதிகளை அடையாளம் காண்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவே உரிய நபர்களுக்குப் பொதிகள் விநியோகிக்கப்படாமைக்கான காரணமேயன்றி, இதில் தபால் திணைக்கள உத்தியோத்தர்களின் மீது எவ்வித தவறுமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.