அநீதி இழைத்தது ‘தாமரை மொட்டு’ – தயாசிறி கவலை

daya

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அநீதி இழைத்துவிட்டது என  சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் ஹட்டனில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் நுவரெலியா மாவட்டத்திலும் இணைந்து பயணித்திருக்கலாம். ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் இந்த மாவட்டத்தில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே தனித்துப் போட்டியிடுகின்றோம். தற்போது கவலைப்பட்டுப் பயனில்லை.

இங்குள்ள சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள், கட்சியின் வேட்பாளர்களைத்தான் ஆதரிக்கவேண்டும். மாற்றுத் தரப்புகளுக்கு ஆதரவு வழங்கினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்படும். பிரதேச சபை உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவி பறிக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் இரு அணிகளுமே பொதுத்தேர்தலில் படுதோல்வியடையும் என்பது உறுதி. பலம்மிக்க கட்சி பிளவுபட்டது கவலைதான். அதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாஸ ஏற்கவேண்டும்.

2011ஆம் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கவில்லை. எனவே, இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதா என என்னால் கூறமுடியாது. தகவல்கள் இருப்பின் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்” – என்றார்.