மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போன தெரணியகலையை சேர்ந்த பாடசாலை மாணவியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெரணியகலை ஶ்ரீ கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரே காணாமற்போயுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி பாடசாலையில் இடம்பெற்ற சரஸ்வதி பூஜையில் பங்கேற்றதன் பின்னர் மாலை மீண்டும் வீடு நோக்கிச் செல்லும் போது மாணவி காணாமற்போயுள்ளார்.
குறித்த மாணவி சீதாவக்க ஆற்றைக் கடக்கும் ஆடிப் பாலத்தை கடந்து சென்றதை சில மாணவிகள் அவதானித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
பாலத்தைக் கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் காட்டு வழியாக உடயங்கந்த தோட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், மகள் வீடு வராததால் தாய் மகளைத் தேடி பாடசாலைக்கு சென்றுள்ளார்.
அங்கும் மகள் இல்லாத நிலையில் பதற்றமடைந்த பெற்றோர் தெரணியகலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காட்டுப்பகுதி மற்றும் உறவினர்களின் வீடுகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.