ஊடகவியலாளர் சோபிதன் மீதான விசாரணைக்கு நல்லூர் பிரதேசசபை கண்டனம்!

sobithan
sobithan

தமிழ் ஊடகவியலாளர் தி.சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவித்துள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாக மூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் சபையின் உப தவிசாளர் ஜெயகரன் குறித்த கண்டனத்தைச் சபைக்குக் கொண்டு வந்தார்.

அவர் அங்குத் தெரிவிக்கையில்,

தமிழ் பத்திரிக்கையான வீரகேசரி பத்திரிக்கையின் யாழ்ப்பாண அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார். நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் வசிக்கும் குறித்த செய்தியாளர் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் காலில் படுகாயம் அடைந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

அவ்வாறான நிலையில் குறித்த விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றித் தருமாறு கோரிய போதிலும் திகதியில் மாற்றம் செய்யலாம் விசாரணைக்குக் கொழும்புக்கே வரவேண்டும் என மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்துள்ளனர்.பொலிஸாரின் இந்த மனிதாபிமான அற்ற செயலை கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைப்பதன் ஊடாக அவர்களின் சுதந்திரத்தை நசுக்குகின்றனர்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நசுக்கப்பட்டனரோ அதேபோல தற்போதைய ஆட்சியிலும் ஊடகவியலாளர்கள் விசாரணை என்ற பெயரில் மறைமுகமாக மிரட்டப்படுகின்றனர். அதற்கு தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றது எனத் தெரிவித்தார்.

“டக்ளஸ், வரதர் தரப்புக்கள் கோத்தாபயவுடன் இணைந்து தமிழர்களை நசுக்க கங்கணம் கட்டுகின்றனர்” என்ற செய்தியை வெளியிட்டமைக்காக குறித்த ஊடகவியலாளர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.