மலையகத்தில் வாக்குகளை சிதறடிக்கத் திட்டம்! எஸ். சதாசிவம் குற்றச்சாட்டு!!

sathasivam
sathasivam

தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் எட்டு தமிழ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தவேலையை யார் செய்தார்கள் என நான் பெயர்கூற விரும்பவில்லை. எனவே, யாருக்கு அரசியல் மற்றும் தொழிற்சங்க அனுபவம் இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராய்ந்தே மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும், மொட்டு அணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

டயகமவில் இன்று (01.07.2020) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

 ” தோட்டத்தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் முதலில் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படவேண்டும். ஆயிரம் ரூபா தொடர்பில் பிரதமர் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கம்பனிகளிடமிருந்து யோசனைகளையும் கோரியுள்ளார். அவை கிடைத்த பின்னர் ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும்.

நல்லாட்சிக்கே கடந்த காலங்களில் எமது தொழிலாளர்கள் கூடுதலாக வாக்களித்தனர். ஆனால், உரிய வகையில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. இந்திய அரசாங்கம் நிர்மாணித்த வீடுகளை காட்டி, தாங்கள் செய்ததாக பெயர்போட்டுக்கொள்கின்றனர். 

கிராம மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படுகின்றது. எமது தொழிலாளர்களுக்கு 7 பேர்ச்சஸ். எனவே, இப்படியான ஏமாற்றுவழி அரசியல்வாதிகளுக்கு, இம்முறை வாக்களிக்கவேண்டாம். ஆளுங்கட்சியிலுள்ள எமக்கே வாக்களிக்கவேண்டும். அப்போதுதான் மலையக மக்களின் அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கமுடியும். அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்கமுடியும்.

நமது வாக்குகளை சிறதடிப்பதற்காகவே எட்டுபேரை போட்டியிடவைத்துள்ளனர். இதை யார் செய்தது என சுட்டிக்காட்ட விருப்பவில்லை. எனவே, யாருக்கு அரசியல் அனுபவம் இருக்கின்றது, யாருக்கு தொழிற்சங்க அனுபவம் இருக்கின்றது என சிந்தித்து மக்கள் வாக்களிக்கவேண்டும். அவ்வாறு சிந்தித்து வாக்களித்தால் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கலாம் என்பதே எனது வேண்டுகோள்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை நாங்களே கட்டியெழுப்பினோம். அதற்காக தியாகங்களை செய்துள்ளோம். நேற்று வந்தவர்களே வரலாறு தெரியாமல் பலவற்றையும் பேசுகின்றனர்.