ஓர் ஆசனம் கூட பெற வக்கில்லாதவர்கள்!

z p01 MR should
z p01 MR should

“நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் ஓர் ஆசனம் கூட பெற வக்கில்லாத மாற்று அணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடானது.”

  • இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (20) ஆசனங்களைக் கைப்பற்றும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

சம்பந்தனின் இந்தக் கருத்தைக் கிண்டலடித்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், கூட்டமைப்பின் தலைமையையும் சாடி வருகின்றனர். இதற்குப் பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மாற்று அணிகள் என்ற பெயரில் களமிறங்கியுள்ள தமிழ்க் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் ஓர் ஆசனம் கூடப் பெறுவது சந்தேகமே. அப்படிப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ அல்லது அதன் தலைமையையோ விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள்.

இவர்களுக்குத் தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் ஓர் அணியாகத் தேர்தலில் களமிறங்கியிருக்கலாம். ஆனால், இவர்களோ பிரிந்து, பிரிந்து நின்று போட்டியிடுகின்றார்கள்.

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில்தான் இவர்கள் இவ்வாறு பிரிந்து நிற்கின்றார்கள். தேர்தலில் இவர்களுக்குத் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளினால் பதிலடியைக் கொடுப்பார்கள்.

போலித் தமிழ்த் தேசியம் பேசித் திரிபவர்கள்தான் இந்த மாற்று அணியினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது மட்டும்தான் இவர்களின் வேலை” – என்றுள்ளார்.