பொலிஸாரின் குழப்பங்களுக்கு மத்தியில் நவாலி படுகொலை நினைவேந்தல்!

FB IMG 1594306221408
FB IMG 1594306221408

பொலிஸாரின் நெருக்குதல் – குழப்பங்களுக்கு மத்தியில் நவாலி படுகொலை நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு இன்றாகும்.

இதையொட்டி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று வியாழக்கிழமை மாலை பங்குத்தந்தை தலைமையில் ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆனால், நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த பொலிஸார் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அதனையும் மீறி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அருட்தந்தையர்கள் மட்டும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த பொலிஸார் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த விடாமல் பொலிஸார் தடுத்தனர்.

அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரின் தடைகளை மீறி சுடரேற்ற முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் தடுத்தார். அவரின் கையை தட்டிவிட்டு சிவாஜிலிங்கம் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இதனால் குழப்பம் ஏற்பட்டது.

எனினும் சிவாஜிலிங்கத்தை தொடர்ந்து பொலிஸாரின் தடைகளை மீறி பொதுமக்கள் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் புக்கார விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.