ஸ்ரீ.சு.கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை!

1 ed
1 ed

ஜனாதிபதி தேர்தலின் ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க அறிக்கை ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்த கட்சியை அழிக்க சதிகாரர்களின் முயற்சிகளைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

17 ஆண்டுகால துயரங்களுக்குப் பிறகு 1994 ல் கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றதைபோல, இலங்கை சுதந்திரக் கட்சியை இப்போதைய நெருக்கடியிலிருந்து மீட்க வழிநடத்துவேன். கட்சியின் பாதுகாப்பிற்காக கட்சி உறுப்பினர்கள் தொடங்கிய போருக்கு நான் தலைமை தாங்குவேன். ஒரு ஒப்பந்தத்தின் மூலம் பல தனிநபர்களின் குறுகிய மற்றும் சிறிய நோக்கங்களை அடைவதற்கு ஒரு சில சதிகாரர்களுக்கு கட்சி காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஒக்டோபர் 10 அன்று கையெழுத்தானது, இது கட்சியின் புகழ்பெற்ற தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான சிறிமவோ பண்டாரநாயக்கவின் 19 வது ஆண்டு நினைவு நாளாகும்.

சுதந்திரத்திற்குப் பின்னர் அனைத்து தேர்தல்களிலும் கட்சி போட்டியிட்ட போதிலும், நாட்டின் 7 வது நிர்வாகத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த கட்சி தவறிவிட்டது.

இலங்கை சுதந்திரக் கட்சி ஜனநாயக விதிமுறைகளையும் கொள்கைகளையும் மிகுந்த மதிப்பில் கொண்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக தனது உயிரை தியாகம் செய்தார்.

முன்னாள் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தனது முயற்சியில் சொல்லமுடியாத கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திக்க நேரிட்டது. இந்த காரணத்திற்காக ஆயிரக்கணக்கான சுதந்திரக்கட்சியினர் தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.

சுதந்திரக்கட்சி மோசடி செய்பவர்கள் அல்லது கொலைகாரர்கள் அடங்கிய அரசியல் கட்சி அல்ல. இது நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சி. இனவெறி, சட்டவிரோதம் மற்றும் சர்வாதிகாரம் மீண்டும் ஆட்சி செய்யும் ஒரு சகாப்தத்தை எங்கள் கட்சி உறுப்பினர்கள் பார்க்க விரும்பவில்லை.

எங்கள் கட்சி வேறு எந்த கட்சியையும் விட நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தது. அது ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. 54 ஆண்டுகளாக பண்டாரநாயக்கக்களின் கீழ் உள்ள கட்சி மக்களைக் கொல்லவில்லை, அது பொது சொத்துக்களை கொள்ளையடித்தது அல்ல.

கட்சி நாட்டை மிகவும் வெளிப்படையான முறையில் ஆட்சி செய்கிறது. மக்கள் நட்பு பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தியது.

கட்சி பிரதமர்கள், ஜனாதிபதிகள் மற்றும் சமூகத் தலைவர்களை உருவாக்கியது மற்றும் சமூகத்தில் குறைந்த சலுகை பெற்றவர்கள் கட்சியின் ஆட்சியின் கீழ் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பலப்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டன் சென்றுள்ள சந்திரிக்கா விரைவில் நாடு திரும்பவுள்ளார். இதன்போது சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.