சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இனவாதிகள்தான்: பிரபாகணேசன்

Praba Ganesan
Praba Ganesan

கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய அனைவருமே சிங்களப் பேரினவாதிகள்தான் என ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவரும் வன்னி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்கையில், அவர்கள் தமிழர்களுக்கு எதனையும் இலகுவில் வழங்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா, நெடுங்கேணியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் நீங்கள் வாக்களித்தவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

இங்கு வீரவசனம் பேசுபவர்கள். மஹிந்தவிடமோ அல்லது அமைச்சர்களிடமோ சென்று சேர் சேர் என்று அழைப்பார்கள். நான் அப்படி அழைத்ததும் இல்லை, அழைக்கவேண்டிய தேவையும் இல்லை.

கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமிசங்க, சஜித் பிரேமதாச ஆகிய அனைவருமே சிங்கள பேரினவாதிகள்தாக. நல்லவர்கள் அல்ல.

தமிழர்களுக்கு எதனையும் இலகுவில் கொடுக்கமாட்டார்கள். ஆனால், எம்மால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இந்தநாட்டில் வரமுடியாது. எனவே. இந்த இனவாதிகளிடம் இருந்து எமது மக்களுக்குத் தேவையான விடயங்களை பெற்றுக்கொள்ளக்கூடியவர்களை நாடாளுமன்றம் அனுப்பினாலே மாற்றம் ஒன்று ஏற்படும். எனவே அதனை உணர்ந்து சரியான முறையில் வாக்களியுங்கள்” என்று தெரிவித்தார்.