சம்பந்தரை விலைபேச முடியாததால்தான் அரசு புது உத்தியாம்: ஜனநாயக போராளிகள் கண்டுபிடிப்பு!

jananayaka poralai
jananayaka poralai

இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.

கடந்த மாதம் வரை கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த ஜனநாயக போராளிகள் கட்சி, மாகாணசபை ஆசனம் தரலாம் என தெரிவித்த பின்னர், அந்தர் பல்டியடித்து, கூட்டமைப்பு ஆதரவு நிலைப்பாடு எடுத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காகவும், அதனைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காகவுமே தமிழர்களுக்கு எதிரான இனப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள இனவாதிகளால் தமிழ் மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இராணுவ அடக்கமுறைகளுக்கு எதிராக வடக்கு கிழக்கிலே உள்ள ஒட்டுமொத்தத் தமிழர்களும் செயலாற்றினார்கள்.

இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின் பின்புலத்தில் இருந்து வந்திருக்கின்ற எமது தமிழ் இனம் வெறுமனே அபிவிருத்திக்கும், சலுகைகளுக்காவும் விலைபோய் விட முடியாது. தெற்கிலே விலைவாசி குறைத்தால் வாக்களிக்கப்படும். ஆனால் வடக்கு கிழக்கிலே அறிவிக்கப்படுகின்ற எந்த சலுகைகளுக்குப் பின்னாலும் தமிழர்கள் செல்ல மாட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போராளிகள் தாங்கி நிற்பதற்கான காரணம் ஒன்றுதான். இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும்.

கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்க முடியாமலும், அவர்களைத் தேசியவாதத்தில் இருந்து பிரிக்க முடியாமல் இருந்த நிலையில் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரே ஒரு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திமே பேரம் பேசலினூடாகப் பணம் கொடுத்து வாங்கப்பட்டார். அந்தப் பலவீனமான மனிதர் தற்போது தன்னை ஒரு பலமானவராகக் காட்டிக் கொண்டு மீண்டும் இந்தத் தேர்தல் மேடைக்கு வந்திருக்கின்றார்.

நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லுகின்றோம் அபிவிருத்திதான் தேவை, வேலைவாய்ப்பு தான் தேவை என்றால் நேரடியாக சிங்களவர்களுக்கே வாக்களித்து விடுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். காணி தந்து, வீடு தந்து அதில் என்ன செய்தாலும் அக்காணிக்கு உறுதி பெறப்படாத வரைக்கும் எப்போது வேண்டுமானலும் நீங்கள் வீதிக்கு வர நேரிடும். இது தான் உரிமை தொடர்பில் உள்ள விளக்கம். உரிமை தொடர்பிலான ஆரம்பக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படாமல் ஏற்படுகின்ற அபிவிருத்தியும் இவ்வாறு தான் நிலையில்லாமல் இருக்கம்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார்கள். தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தார்கள் என்றெல்லாம் சொல்கின்றார்கள். ஆனால், ஹிஸ்புல்லா கட்டிய பல்கலைக் கழகத்திற்கு நடந்த நிலைமையை அனைவரும் சிந்தித்துப் பார்த்தால் உள்ள நிலைமை விளங்கும்.

ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிநிற்கின்றது. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கல்லையும் பிடுங்கி எடுப்பதற்கு பேரினவாதம் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த விடுதலைப் போராட்டத்திற்கு வடக்கு எந்தளவுக்கு அர்ப்பணிப்பினைச் செய்துள்ளதோ அதற்கு ஒருபோதும் சலைக்காத அளவில் கிழக்கும் இந்தப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்பினைச் செய்துள்ளது. வடக்கிலே ஏற்படுகின்ற அரசியற் தடுமாற்றங்கள் இன்னுமொரு தமிழருக்கான வாய்ப்பாகவே அமையும். ஆனால் கிழக்கில் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு சிறு அசைவு கூட தேவையற்ற விதத்திலே இன்னுமொரு இனத்தை வளர்த்தெடுக்கக் கூடிய விதத்திலேயே அமையும்.

அபிவிருத்தியை நாங்கள் எமது மாகாணசபை அலகின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பாராளுமன்றம் என்பது பேரம் பேசி எமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்கின்ற ஒரு இடம். அந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் செல்லுகின்றார்கள் தாங்கள் பாராளுமன்ற உறுப்பிரான பின்னர் ஜனாதிபதி அமைச்சுப் பதவி தருவார் என்று. அவர்கள் சொல்வதைப் பார்த்தால் இலங்கையின் அமைச்சரவை கிட்தட்ட 200 மேற்பட்ட அமைச்சர்களைக் கொண்டதாகத் தான் அமைய வேண்டும்.

இங்கே வேறு கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களோ அல்லது சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களோ குறைந்தது ஆளுக்கு 100 வாக்குகளைப் பெற்றுக் கொண்டாலும் இங்கே தமிழர்களின் ஒரு பிரதிநித்துவம் இழக்கப்படும்.

எனவே ஆரோக்கிமான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக பலமான ஒரு தமிழ்த் தேசியத்தைக் கொண்டு வரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் இருக்கின்றது. அந்தவகையில் தமிழ் மக்கள் ஒரே முடிவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து ஒரு மாபெரும் வெற்றியை நோக்கி நகர்த்த வேண்டும்.

தற்போதுள்ள ஜனாதிபதி தனிச் சிங்கள மக்களால் உருவாக்கப்பட்டவர் எனச் சொல்லப்படுகின்றார். நல்லாட்சியில் இருந்த ஜனாதிபதியை நாமும் சேர்த்து உருவாக்கியமையால் அவர் இரு பக்கமும் சார்ந்து செல்லக் கூடியவராக இருந்தார் ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இருக்க மாட்டாது. நாங்கள் பலம் வாய்ந்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினால் எமக்கான தீர்வு வருமா வராது என்ற விடயத்தை சிங்கள அரசிடம் உரத்துக் கோரி, அவர்கள் அதற்கான முடிவினை சர்வதேசத்திடம் சொல்ல வைக்க முடியும். தீர்வு கிடைக்கும் என்றால் சிங்கள் தேசம் தமிழர்களுடன் சேர்ந்து வாழத் தயார் என்று சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும். இல்லை என்று அவர்கள் சர்வதேசத்திற்குச் சொல்லும் பட்சத்தில் நாங்கள் சர்வதேசத்துடன் இணைந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.