கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் மஹிந்த கருத்து

mahinda 1
mahinda 1

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டைப் பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை.”என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெல்லவாய, செவனகல, தன்தும சந்தியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் -“

“நாங்கள் அதிகாரத்துக்கு வந்தமையால் மத்தள விமான நிலையத்தைக் காப்பாற்ற முடிந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் நேரத்தில், அம்மாவட்ட மக்களின் வாக்குகளில் அதிகாரத்துக்கு வந்த அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்தபோதிலும், இதனை விற்பனை செய்ய வேண்டாம், இது எங்கள் சொத்து எனக் கூறுவதற்கு ஒரு அமைச்சருக்கும் தைரியம் வரவில்லை. எனினும், ஒன்றையும் விற்பனை செய்ய விடமாட்டோம் என சஜித் தற்போது கூறுகின்றார். நாங்கள் இந்த நாட்டின் சொத்துக்களை ஒருவருக்கும் விற்பனை செய்ய இடமளிக்க மாட்டோம். அந்தச் சொத்துகளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்காகவும் பாதுகாக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுகின்றார்கள் என பத்திரிகையில் பார்த்தேன். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்தவர்கள். பண்டாரநாயக்க, டீ.ஏ.ராஜபக்ச போன்றவர்கள்தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியே வந்து கட்சியை அமைத்தார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி, கட்சியை வலுப்படுத்தி, கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கும் எங்களால் முடிந்தது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கள் முதுகில் குத்தியது. அதன் பின்னர்தான் நாங்கள் தாமரை மொட்டின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியை உருவாக்கி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றோம். எங்களுக்குத் தற்போது கட்சி ஒன்று உள்ளது. தற்போது கட்சியை வலுப்படுத்தி முன்நோக்கிச் செல்வோம்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன என்னை அழைத்துப் பிரதமர் பதவியை வழங்கினார். அதற்கு முன்னர் 54 ஆசனங்கள் எங்களுக்கு இருந்த போதிலும் எங்களுக்கு எதிர்க்கட்சி தலைமைப் பதவியை வழங்கவில்லை. 16 ஆசனங்கள் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி வழங்கப்பட்டு 6 ஆசனங்கள் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிர்க்கட்சிக் கொறடா பதவி வழங்கப்பட்டது.  

நாங்களும் தந்திரங்களைப் பயன்படுத்தி பிரதமர் பதவியை ஏற்று 51 நாட்களின் பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றோம். தற்போது நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றோம். நாங்கள் அதிகாரத்துக்கு வந்து சிறிய காலப்பகுதிக்குள் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலாவது நடத்துவோம்.

நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து முன்னணிக்கு வந்துள்ளோம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம். வாக்கு சண்டைகளுக்குச் செல்ல வேண்டாம். 50 வருட அரசியல் அனுபவம் கொண்டவனாக இதனை ஆலோசனையாகக் கூறுகிறேன்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ தரப்பு மற்றும் ரணில் தரப்பு எனப் பிரிந்த அந்த இரண்டு தரப்பினரும் சிறிகொத்தவைக் கைப்பற்றவே ஆயத்தமாகின்றார்கள்.

இந்த நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிறிகொத்தவைக் கைப்பற்றவா வாக்களிக்க வேண்டும். அதனைக் காணி வழக்குத் தாக்கல் செய்து தீர்த்துக்கொள்ள முடியும்.

கடந்த நாட்கள் நான் நாடு முழுவதும் சென்றேன். ஐக்கிய தேசியக் கட்சியில் வாக்களிப்பதற்கு ஒருவர் இல்லை என அக்கட்சி உறுப்பினர்கள் என்னிடம் கூறினார்கள். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைக் கைப்பற்ற ஆயத்தம் இல்லை. கட்சியைப் பிடிப்பதற்கு மாத்திரமே ஆயத்தம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வேலைத்திட்டங்கள் சிறப்பாக, தெளிவாக, வலுவாக உள்ளன என்று  இன்று ஐக்கிய தேசியக் கட்சியினரும் கூறுகின்றார்கள். எனவே, அனைவரையும் இணைத்துக்கொண்டு மூன்றில் இரண்டு அதிகாரத்தை இந்தத் தேர்தலில் பெற்றுக்கொள்வது அவசியமாகும். அரசமைப்பை மாற்ற, நாட்டுக்குப் பொருத்தமான ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு நாங்கள் ஆயத்தம்.

பிரபாகரன் துப்பாக்கியில் பெற முயற்சித்த நாட்டை பேனையில் வழங்க நாங்கள் தயாரில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் கிட்டட்டும்” – என்றும் குறிப்பிட்டுள்ளார்.