ரிஷாட் பதியுதீனுக்கு விசாரணைக்கு மீண்டும் அழைப்பாணை

download 9
download 9

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பாணை விடுத்துள்ளது.

அந்தவகையில்,இன்று காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட் தொடர்பிலான விவகாரம் ஒன்று குறித்தே, வாக்குமூலம் வழங்குவதற்காக ரிஷாட் பதியுதீன் கட்டாயம் ஆஜராக வேண்டுமெனத் தெரிவித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார்.

தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றின் ஊடாக ரிஷாட் பதியுதீன் அறிவித்திருந்த நிலையிலும் இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலின் பின்னர், ரிஷாட் பதியுதீன், தமது தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக அம்பாறைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நேரத்தில் இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை குழப்பியடிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அடிக்கடி அழைப்பாணைகள் விடுக்கப்படுவதாகவும் ரிஷாட் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.