சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தனி சிறப்பு சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவின் கீழே இந்த பிரிவு செயற்படும் என்றும் குறிப்பிட்டார்
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
போதைப் பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஊடாக சட்டவிரேதமாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துக்களை கறுப்புபண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய இவ்வாறான சொத்துக்கள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கீழ் ஸ்தாபிக்கப்படும் இந்த விசாரணை பிரிவில் செய்றபடுலவதற்காக தெரிவுச் செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விரைவில் இதனை ஸ்தாபிப்பதுடன். சட்டவிரோதமான முறையில் வைத்திருக்கும் சொத்துகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை அரசுடமையாக்குவது மாத்திரமின்றி, அதனை எவ்வாறான முறையில் அரசுடமையாக்குவது என்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை தொழிநுட்பங்களை பயன்படுத்தி தகவல்அறிவதற்கும் இந்த பிரிவுக்கு பயிற்சிப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை இவ்வாறான சட்டவிரோத சொத்துக்களை வைத்துக் கொண்டுள்ள குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் அவர்களுக்கும் இவ்வாறான சொத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளதா ? என்பது தொடர்பிலும் குறித்த பிரிவு விசாரணைகளை மேற்கொள்ளும்.
இதன்போது போதைப் பொருள் கடத்தல் , கறுப்புபணம் , பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக கிடைக்கப் பெறும் பணம் தொடர்பிலே விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் , இந்த விசாரணைகள் அனைத்துமே குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழே இடம்பெறும்.