தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் இன்று புதன்கிழமை (22) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடனவும் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவுக்கும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினருக்கும் இடையில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை (21) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சர் வௌியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 19 ஆம் திகதி முதல் டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளனர்.
தமது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மேலும் 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதற்கு தயாராவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொதுசுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஏழாவது நாளாகவும் தொடர்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.