தொழில் வீசா மோசடிக் கையொப்பம்: சுற்றுலா அதிகார சபை ஊழியர் கைது

visa process bg

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு தொழில் வீசா கோரி, அதிகார சபையின் பணிப்பாளரின் கையொப்பத்தை மோசடியாக வைத்து, குடிவரவுத் திணைக்களத்துக்குப் பரிந்துரைக் கடிதங்களை அனுப்பினார் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், குறித்த ஊழியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றும் குறித்த நபரை நேற்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோவைத் தொடர்புகொண்டு இது தொடர்பில் கேட்டபோது,

“இரண்டு தொழில் வீசா பரிந்துரைக் கடிதங்கள் குறித்து, குடிவரவு திணைக்களத்தால் விடுக்கப்பட்ட விசாரணையில், பணிப்பாளர் ஒருவரின் போலியான கையொப்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்ற பல முறைகேடுகள் கடந்த காலங்களில் நிகழ்ந்தன. கடந்த ஜனவரி முதல் நாம் மாற்றங்களைச் செய்து வருகின்றோம்.

இலங்கை சுற்றுலாவை இழிவுபடுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை.

இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதால், கோபமுற்றுள்ள சில ஊழியர்களால் தலைமைத்துவத்தை இழிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.