மனோவை நாடாளுமன்றம் அனுப்புவது கொழும்பு தமிழரின் கடமை- சிறீதரன்!

mano copy
mano copy
  • கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சிறிதரன் எடுத்துரைப்பு.

“ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசனை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் முக்கிய கடமையாகும்.”

  • இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்வதனால் அவர்கள் தமிழ்க் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள்.

ஆனால், கொழும்பு மாவட்ட நிலவரம் அவ்வாறானதல்ல. இதற்கு நேர்மாறானது. காரணம் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் வாழுகின்ற மாவட்டம் கொழும்பு ஆகும். அங்கு வசிக்கின்ற சிங்கள மக்கள் சிங்கள தேசியக் கட்சிகளுக்கே தமது வாக்குகளை வழங்குவார்கள்.

ஆகவே, அங்கு இருக்கின்ற தமிழர்கள் தமது வாக்குகளைச் சிதறடிக்காது தமது விருப்பு வாக்குகளை மனோ கணேசனுக்கு வழங்கி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்குக் கொடுத்த ஆணையை விடப் பல மடங்கான ஆணையை இம்முறை வழங்க வேண்டிய கடமை உள்ளது. இந்த ஜனநாயகக் கடமையை – இந்தக் காலத்தின் கட்டளையை கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றேன்

இலங்லையிலுள்ள தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது அல்லது அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது குரல் கொடுக்கின்ற ஒரு மனிதநேய வாதியாகவே மனோ கணேசனைப் பார்க்கின்றேன்.

தமிழர் தரப்பு நியாயங்களையும் சிங்கள பேரினவாத அரசின் போலிப் பரப்புரைகளையும் தகர்த்து அதன் உண்மைத்தன்மைகளை சிங்கள மக்களுக்கு வழங்கக் கூடிய பேச்சாற்றல் மற்றும் மொழியாற்றல் உள்ள தமிழ் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

ஆகவே, இவ்வாறானவர்கள் என்றுமே தவிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற உண்மையைக் கொழும்பு மாவட்ட தமிழர்கள் புரிந்து அவரை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளதை அனைவரும் அறிகின்றோம்; பார்க்கின்றோம்.

இந்தநிலையில் தமிழர்களின் இருப்பைத் தக்கவைக்க – தமிழர்கள் தங்களின் அடையாளங்களுடன் வாழ அனைத்துப் பகுதிகளிலும் தமிழர் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட – நலன்களுக்காக செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழர்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய சந்தர்ப்பத்தைக் காலம் உருவாக்கியுள்ளது. அந்தக் காலத்தின் கட்டளையை ஏற்று ஒரே திசையில் ஒரு இலக்கு நோக்கிப் பயணிக்கத் தயாராவோம்” – என தெரிவித்துள்ளார்.