கொள்ளுபிட்டி பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட போதைப் பொருளடங்கிய முத்திரைகளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை பொலிஸ் போதைப் பொருள் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளவத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதைப் பொருளடங்கிய (எல்.எஸ்.டி) முத்திரைகள் 3150 கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப் பொருள் பிரிவினர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரான இளைஞனை ஆஜர்படுத்தியுள்ளதுடன், இதன் போது நீதிவான் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.