நாட்டின் பொரலஸ்கமுவ பகுதியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறுபேரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பொரலஸ்கமுவ பகுதியில் மிரிஹான விசேட விசாரணை பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திட்டமிட்ட முறையில் மிரிஹான , பொரலஸ்கமுவ மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் விநியாகத்தில் ஈடுபட்டு வருவதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 45 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அனைவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த போதைப் பொருள் கடத்தலும் சிறைக்கைதி ஒருவராலே திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது. அதற்கமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்