திருகோணமலை சீனக்குடாவில் சிறுமியொருவரின் கையைப் பிடித்து தொலைபேசி இலக்கதினை கொடுத்த குற்றச்சாட்டில் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஐவரையும் இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
சந்தேக நபர்கள் ஐவரும் இணைந்து வீதியில் நின்ற பதினைந்து வயதுடைய சிறுமிக்கு தொலைபேசி இலக்கத்தினை எழுதி கையைப்பிடித்து பெற்றுக்கொள்ளுமாறு திணித்துள்ளனர்.
இச்சம்பவத்தினை நேரில் கண்ட ஊர்வாசி ஒருவர் கூக்குரலிட்டு அனைவரையும் ஒன்று சேர்த்து சிறுமி நின்ற இடத்திற்குச் சென்று சந்தேக நபர்களிடம் விபரத்தினை கேட்க சந்தேக நபர்கள் ஊர்வாசிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் காயங்களுக்குள்ளான நபர் ஒருவர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் ஐவரையும் பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.