தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை

vPhoto 12 1
vPhoto 12 1

லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் இன்று (28) காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இதனால் 10 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து அயலவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 1 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.

எனினும், சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 10 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் தற்காலிகமாக தோட்ட கலாச்சார மண்டபத்திலும், தோட்ட முன்பள்ளி பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.