நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது எனப் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தாம் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளருக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார் எனவும், அதற்கிணங்க நாட்டின் அனைத்து சாரதி பயிற்சி பாடசாலைகள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சாரதிகளின் முறையான பயிற்சிகள் இல்லாத காரணத்தாலேயே நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதனை முறைப்படுத்தும் முறையான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
நாட்டில் 538 சாரதி பயிற்சிப் பாடசாலைகள் இயங்குகின்றன. இந்தநிலையில் அந்தப் பாடசாலைகள் எந்தவொரு முறையான நியதிகளையும் கொண்டிருக்கவில்லை.
மேற்படி பாடசாலைகள் முறையான சாரதி பயிற்சிகளை மேற்கொள்ள முன்னரே சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுக்கின்றன.
அதற்கிணங்க மேற்படி சாரதி பயிற்சிப் பாடசாலைகளில் சேவையிலுள்ள ஆலோசகர்களுக்கு முறையான தெளிவூட்டல்களை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.