தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் – க.மகேசன்

jaffna ga 720x439 1

எதிர்வரும்  நாடாளுமன்ற  தேர்தலை  நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள  நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் யாவும் தற்போது பூரண படுத்தப்பட்டுள்ளன, இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேர்தலில் பங்குபற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளன பயிற்சிகள் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கு மற்றும் வலய தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் , விசேடமாக சுகாதார நடைமுறை ஏற்பாடுகளை மேற்கொள்கின்ற உத்தியோகத்தர்களுக்குரிய பயிற்சிகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் ஆளணி கட்டுப்பாடு , போக்குவரத்து ,மண்டப ஒழுங்கு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் பொது வசதிகள் போன்ற சகல நடவடிக்கைகளும் அனேகமாக பூரணப் படுத்தப்பட்டு விட்டன தற்போது இறுதி கட்ட நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்.

இந்த  நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சுமார் 7ஆயிரத்து 795 உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளார்கள் 508 வாக்கெடுப்பு நிலையங்களில்  வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

அதே போல இந்த தடவை வாக்கெண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்படவுள்ளது  89நிலையங்களில் இந்த வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது அதில் 73 சாதாரண வாக்களிப்பு நிலையங்களும் 16 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களாக இந்த தடவை அமைத்திருக்கின்றோம்.

இந்த தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி  29 ம்திகதியுடன்  முடிவடைந்தது  எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள்  தபால் நிலையங்களுக்கு சென்று தங்களுடைய அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய உள்ளன ஏற்றுக்கொள்ளப்பட்ட விதத்திலே அவர்களுடைய பிரச்சாரங்கள் இடம்பெறுவது நல்லது.

இந்த தேர்தலிலே மொத்தமாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு

தேர்தல் வாக்கெடுப்பு தினமாகிய ஐந்தாம் திகதி அதிகாலையிலேயே சகல வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும் இது அவர்களுடைய ஒரு ஜனநாயக கடமை ஆகவே சகல வாக்காளர்களும் தங்களுக்கு உரித்தான அந்த உரிமையை அவர்கள் நீதியாகவும் நியாயமாகவும் அந்த உரிமையை செயற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

சகல வாக்காளர்களும் அதிகாலையிலேயே சென்று எந்தவித பயமுமின்றி வாக்களிப்பினை மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் அத்தோடு நேரத்திற்கு சென்று உங்களுடைய வாக்களிக்குமாறு நான் கோரிக்கை விடுகின்றேன்.

வாக்களிப்பு நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உங்களுடைய வாக்குகளை அளிக்க முடியும் மேலும் தங்களுடைய வாக்குரிமையை இந்தச் சந்தர்ப்பத்திலே சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த பொதுத் தேர்தலை நீதியாகவும் நியாயமாகவும் நடுநிலையாகவும் நடாத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் எம்மால்மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனைவிட தேர்தல் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடயங்களும் எம்மால்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவே வாக்காள பொதுமக்கள் தங்களுடைய வாக்களிப்பு உரிமையை  சிறப்பாக பயன்படுத்திகொள்ள வேண்டும்.

தேர்தலில் போட்டியிடுகின்ற சகல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தங்களுடைய செயற்பாடுகளை தேர்தல் சட்டத்தை மதித்து செயல்படவேண்டும்

தேர்தல்  நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையானதாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைக்குமாறு நான் கோரிக்கை விடுகின்றேன்” என்றார்.