இலங்கையர்களை மீண்டும் அழைப்பது நாளை ஆரம்பம்!

கொலம்பகே
கொலம்பகே

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளது என ஜனாதிபதியின் வெளிநாட்டு உறவுகளுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளையும், நாளை மறுதினமும் இரண்டு விமானங்கள் மூலம் டுபாயில் இருந்து 550 இலங்கையர்கள் ஏற்றி வரப்படவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்து வரும் நாட்களில் சவூதி அரேபியா, ஜோர்தான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து விமானங்களில் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையர்கள் நாடு திரும்பும்போது முன்னெடுக்கப்படவுள்ள விதிமுறைகள் தொடர்பில் அவரிடம் வினவியபோது, “அந்தந்த நாடுகளில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று உறுதி செய்யப்படாதவர்களே நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்” என்று பதிலளித்துள்ளனர்.

எனினும், அவர்கள் நாடு திரும்பிய பின்னர் விமான நிலையத்தில் வைத்தும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் எனவும், 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.