ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை! 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில்

elections1

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 3652 அரசியல் கட்சிகளும் 3800 சுயாதீன குழுக்களும் போட்டியிடவுள்ளன. கொழும்பு , கம்பஹா , களுத்துறை , கண்டி , மாத்தளை, நுவரெலியா , காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம் , வன்னி , மட்டக்களப்பு , திகாமடுல்லை , திருகோணமலை , குருணாகல் , புத்தளம் , அநுராதபுரம் , பொலன்னறுவை , பதுளை , மொனராகலை , இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக 7 , 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர்.

ஆசனங்கள்

பொதுத் தேர்தலில் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளை அவதானிக்கும் போது கொழும்பு 19 , கம்பஹா 18 , களுத்துறை 10 , கண்டி 12 , மாத்தளை 5 , நுரவெலியா 8 , காலி 9 , மாத்தறை 7 , அம்பாந்தோட்டை 7 , யாழ்ப்பாணம் 7 , வன்னி 6 , மட்டக்களப்பு 5 , திகாமடுல்லை 7 , திருகோணமலை 4 , குருணாகல் 15 , புத்தளம் 8 , அநுராதபுரம் 9 , பொலன்னறுவை 5 , பதுளை 9 , மொனராகலை 6 , இரத்தினபுரி 11 , கேகாலை 9 என்ற அடிப்படையில் 196 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவர்.