கிரேண்பாஸ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருட்கள் மற்றும் 4 இலட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் ஐந்து பெண்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரேண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொழும்பு வடக்கு பிரிவின் பொலிஸார் உள்ளடங்களாக 517 பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கமைய, 37 கிராம் 830 மில்லி கிராம் ஹெரோயின் , 85 கிராம் கஞ்சா போதைப் பொருள் மற்றும் 11 போதை மாத்திரைகளுடன் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , 4 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 6 தொலைபேசிகளுடன் ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.