அவசியமில்லாத மின்சார உபகரணங்களை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை, நாட்டு மக்களிடம் கேட்டுள்ளது.
நேற்று முன்தினம் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.
அத்துடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலும் செயலழிப்பு நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக நேற்று முதல் நான்கு நாட்களுக்கு இரண்டரை மணித்தியாலம் மின்சாரம் தடை செய்யவுள்ளதாக மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்களில் ஒன்று முழுமையாக வெடித்துள்ளது. அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்களாகும் என மின் நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் செயலழிந்த ஏனைய இரண்டு இயந்திரங்களை செயற்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.
இந்த நெருக்கடி நிலை வழமைக்கு திரும்பும் வரையில் மின்சார விநியோக தடை ஏற்படும். இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.