அனைத்து இனங்கள் மற்றும் மதங்களை சமமாகக் கருதுவதுடன், பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண மஹாசங்க கூட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர், மஹாசங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், குருநாகல் மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய தனக்கு கடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலுமுள்ள மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.
அதேபோன்று, நாட்டின் எதிர்காலத் திட்டங்களை மஹாசங்கத்தின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் பேரில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாகக் கூறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக நடத்துவதிலும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த குறிப்பிட்டார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் வடமேல் மாகாணத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.