மண் சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி!

Tharmapuram 4
Tharmapuram 4

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் மண் சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பிரமந்தனாறு விசுவமடு சந்தியை இணைக்கும் வீதியில் புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றது.

பாலத்தின் கட்டுமான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் கொங்கிரீட் இடுவதற்காக குறித்த குடும்பஸ்தர் பணியில் ஈடுபடு்தப்பட்டுள்ளார்.

இதன்போது மண் சரிந்து விழுந்ததில் கம்பிக்குள் சிக்குண்டு குறித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவத்தில் 1ம் யூனிற் தர்மபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இராசலிங்கம் சசிதரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மேலும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்ப அங்கிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவு்ம, கட்டுமான பணிகளை முன்னெடுத்துவரும் தனியார் நிறுவனம் பொறுப்புடன் செயற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். உயிிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.