6 விடயங்களை ஆராய நாளை கூடும் தமிழரசு

tnaaaa
tnaaaa


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை சனிக்கிழமை வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமிப்பு தொடர்பில் ஆராய்தல், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கான  வழிவகைகளை ஆராய்தல், தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும் பின்னருமான காலங்களில் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் எதிரான பரப்புரைகள் – செயற்பாடுகள் பற்றி ஆராய்தல்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கான சுயாதீனக் குழுவைவொன்றை நியமிப்பது தொடர்பில் ஆராய்தல், தேர்தல் காலத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்தல்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்தல் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசியப்பட்டியல் நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் தலைவருக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயற்பட்டதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.