குடும்ப ஆட்சிக்காக ’19’ஐ நீக்க ராஜபக்சக்கள் அயராத முயற்சி ; சஜித் அணி பகிரங்க குற்றச்சாட்டு

3 2

“நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தாமல் , ராஜபக்சக்கள் தங்களது குடும்பத்தின் பலத்தைப் பாதுகாப்பதற்காக அவசரமாக 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சிக்கின்றார்கள்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க குற்றஞ்சாட்டினார்.

“மக்களின் எண்ணங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசு செயற்பட்டால் பிரதான எதிர்க்கட்சியாக மக்களின் பக்கமிருந்து நாம் செயற்படுவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்காத முதல் அரசாக தற்போதைய அரசே வரலாற்றில் பெயர் பதிக்கப் போகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியை அடுத்து , மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அதுவரையில் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் அரசு இடைக்காலக் கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றம் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உரிய தினத்தில் பொதுத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை உரிய தினத்தில் திறப்பதற்கும் முடியாமல் போயிருந்தது.

இந்தநிலையில், கடந்த அரசால் இடைக்காலக் கணக்கறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏப்பரல் 30ஆம் திகதி வரையில் அரச செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்றம் கடந்த 20ஆம் திகதியே திரும்பச் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இந்தநிலையில் ஏப்ரல் 30ஆம் தொடக்கம் இன்று வரையில் அரசு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வாறு நிதி ஒதுக்கீட்டை செய்தது? இது அரசமைப்புக்கு முரணான செயற்பாடாகும்.

தற்போது செப்டெம்பர் தொடக்கம் டிசம்பர் மாதம் வரைக்கான இடைக்காலக் கணக்கறிக்கை அரசால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நிறைவேற்றப்பட்ட இடைக்காலக் கணக்கறிக்கைகள் தொடர்பில் அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சுபீட்சமான அரசு என்று கூறப்படும் அரசு எவ்வாறு தொடர்ந்தும் செயற்படப்போகின்றது என்பதை நாங்கள் அவதானமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இதேவேளை, கடந்த காலங்களையும்விட தற்போது கடன் தொகையானது பாரியளவில் அதிகரித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற ஆட்சிக்காலத்தின்போது 95 ஆயிரம் ரூபாவாக இருந்த தனி நபர் ஒருவருக்கான கடன் தொகை , மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருந்தது. தற்போதைய அரசின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது அது ஐந்து இலட்சத்திலிருந்து ஆறு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இதேவேளை, அரசின் முறையற்ற வரி குறைப்பினாலும் , கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், அரச ஊழியர்களுக்கு ஊதியம் பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து அரசு நிதி பெற்றுக் கொண்டுள்ளது.

இந்தநிலையில், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தாமல் , ராஜபக்சக்கள் தங்களது குடும்பத்தின் பலத்தைப் பாதுகாப்பதற்காக அவசரமாக 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சிக்கின்றார்கள்.

ஒரு அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அல்ல , நூறு வீத ஆதரவை மக்கள் அவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தாலும், அவர்கள் நாட்டின் அரசமைப்புக்குப் புறம்பாகச் செயற்பட முடியாது. அரசு மக்களின் எண்ணங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் , பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் மக்களின் பக்கம் இருந்தே செயற்படுவோம்” – என்றார்