கிராமசேவகரின் இடமாற்றத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்.

8 1

வவுனியா இராசேந்திரங்குளம் பகுதிக்கான கிராம சேவையாளரை இடமாற்றம் செய்யவேண்டாம் என்று கோரி அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.

இராசேந்திரங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது எமது பகுதிக்கான கிராமசேவையாளர், எமக்கு சிறப்பான சேவைகளை ஆற்றியுள்ளார். எனவே அவரை வேறுபகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டாம் என்றும் மீண்டும் எமது கிராமத்திற்கே நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன்,வவுனியா  பிரதேச செயலாளருடனும் தொலைபேசியில் கலந்துரையாடிருந்தார்.
அதன் பிரகாரம் குறித்த கிராம சேவையாளரை இடமாற்றம் செய்வதை இடைநிறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினரால் வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு அமைய போராட்டம் நிறுத்தி கொள்ளப்பட்டது.