கண்டி – தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த பகுதிகளுக்கு விசேட குழுவினர் சென்றுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கண்டி – தலாத்து ஓயாவை அண்மித்த திகண, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) இரவு 8.34 மணியளவில் சிறியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இதுவொரு நிலநடுக்கம் அல்லவெனவும் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அந்தப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.
மேலும் நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருக்குமாயின், தமது பணியகத்தின் கீழுள்ள 05 மத்திய நிலையங்களில் அது குறித்து பதிவாகியிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த பகுதிகளுக்கு விசேட குழுவினர் சென்றுள்ளதாக அனுர வல்பொல தெரிவித்தார்.