இராணுவத்தினரால் காட்டாவிநாயகர் ஆலய வீதி புனரமைப்பு

IMG 20200903 WA0003 1

மாங்குளம் முல்லைத்தீவு வீதியையும், நெடுங்கேணி தண்டுவான் ஊடான முல்லைத்தீவு வீதியையும் இணைக்கின்ற சுமார் 1.3 கி.மீற்றர் தூரமுள்ளது காட்டாவிநாயகர் ஆலய வீதியை இராணுவம் பொதுமக்களின் உதவியுடன் புனரமைப்பு செய்து வருகின்றனர். இதனால் இராணுவத்தினர் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

இவ் ஆலய வீதியானது பல தசாப்த காலமாக தாரிடப்பட்ட முல்லைத்தீவு – வவுனியாவுக்கான பஸ் போக்குவரத்துக்கள் நடைபெற்ற, நடைபெறுகின்ற முக்கிய வீதி மட்டுமன்றி பல நூற்று கணக்கான மக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்குரிய வீதியுமாகும்.

ஆனால் இன்று மக்களது பயன்பாட்டுக்குரியதாக அன்றி குன்றும் குழியுமாகவும், கிரவல் வீதியாகவும் மாறும் அபாயம் காணப்படுகின்றது.

இக் கிராமத்து மாணவர்கள் மூன்று பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக செல்கின்றனர் அவர்கள் பாடசாலைக்கு செல்லும் முக்கிய வீதியாக இது காணப்படுகின்றது. மேலும் இப்பிரதேச விவசாயிகளும், அயல்கிராம மக்களும் தமது வயல், தோட்ட நிலங்களுக்குச் செல்வதற்கு இவ் வீதியினை பயன்படுத்துவது வழக்கமாகும்.

வருடாந்தம் வைகாசி மாதம் மேற்படி வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வரலாற்று பெருமைகளையும், கலாச்சார பாரம்பரியங்களையும் கொண்ட காட்டாவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்விழா நடைபெறுவதும் இதற்காகப் பெருந்தொகையான பக்தர்கள் ஏனைய பிரதேசங்களில் இருந்து வருகை தருகின்றனர்.

ஆயினும் யுத்தம் முடிவடைந்து 12ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கவனிப்பாரற்று கிடக்கின்றது வடக்கு மாகாண சபைக்குரியதும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ளதுமான இவ் வீதி அகல காடுகள் கூட வெட்டப்படாத நிலையில் பற்றை மூடி பாதை சுருங்கி நடைபாதையாகும் நிலை ஏற்படுமோ என்று அச்சப்பட வேண்டுயுள்ளது.

மழை காலங்களில் பாதை வழியாக நீர் பாய்ந்தோடுவதால் பொது மக்கள் இவ் வீதியால் போக்குவரத்து மேற்கொள்வதற்கு மிகவும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். எனவே பொது மக்களின் நலன்கருதி இவ் வீதியைத் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உதவுமாறு கோரியிருந்தும் யாருமே இவ் வீதியை கவனத்தில் எடுக்காததன் காரணத்தினால் இராணுவம் பொதுமக்களின் உதவியுடன் குறித்த வீதியை துப்பரவு செய்து வருகின்றனர். இதனால் இராணுவத்தினர் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.