கஞ்சா பொதியை தபால் உறைகளிற்குள் வைத்து விற்பனை செய்து வந்த தபால் ஊழியர் கைது!

1 6

புஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஞ்சலகம் ஒன்றில் கடமையாற்றும் தபால் ஊழியர் ஒருவர் சூட்சுமமான முறையில் கஞ்சாவை தபாலுறையில் பொதி செய்து விற்பனை செய்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். கைதானபோது அவரிடமிருந்து 24 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

15 வருடங்களின் மேலாக தபால் விநியோகஸ்தராக கடமையாற்றி வரும் இவர், கடந்த 5 வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

சந்தேகநபர் தொடர்பாக புஸல்லாவ பொலிசாருக்கு நீண்டகாலமாக கிடைத்து வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிசார் அவரை கண்காணித்து வந்தனர்.

கடந்த சனிக்கிழமை புஸல்லாவ நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து புஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக ஹெமகுமாரவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர், சந்தேகநபரை கைது செய்தனர்.

அவர் நீதிமன்ற அனுமதியுடன் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.