மருத்துவ பீடங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

49

அரசு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.எல். பீரிஸ் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான வளங்கள் மற்றும் திறன்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதிகள் முன்னெடுத்த பல சுற்றுக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிக மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மனித வளங்களில் சேரும் எதிர்கால மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை கல்வி அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.