மகாவலி – மாதுரு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்

DSC 0017 1
DSC 0017 1

மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களை உள்ளடக்கியதான மகாவலி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் மாதுறு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (08) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மகாவலித் திட்டத்தின்கீழ் விவசாய மேம்பாட்டு திட்டத்தினை நோக்காகக் கொண்டு 1982 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக மதுரு ஓயா நீர்த்தேக்கம் காணப்படுகின்றது.

இத்திட்டத்தின்கீழ் மாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தித் திட்டம் முடிவுறுத்தப் பட்டிருந்தாலும் அதன் விரிவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களை இணைத்ததான மாதுரு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்ட வேலைகள் யுத்த சூழ்நிலை காரணமாக தடைப்பட்டிருந்தது.

இருந்தபோதும் தற்பொழுது இத்திட்ட வரைபானது அனுமதிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவின் பேரிலாவெளி, முறுத்தாணை, குடும்பிமலை, வடமுனை, ஊத்துச் சேனை, புணானை மேற்கு, கள்ளிச்சை போன்ற 7 கிரமங்களும் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவின் ஈரளக்குளம் பிரதேசமும் அம்பாரை மாவட்டத்தின் ஒரு கிராமமும் உள்ளடங்குகின்றன.

இத்திட்டத்தில் நெற்செய்கைக்காக 2700 ஹெக்டேயர் நிலப்பரப்பும், ஏனைய பயிர்களுக்காக 6712 ஹெக்டேயர் நிலப்பரப்பும், கால்நடை பண்ணை வளர்ப்பிற்காக 3025 ஹெக்டேயர் நிலப்பரப்பு உட்பட மொத்தம் 17 ஆயிரத்தி 735 ஹெக்டேயர் நிலப்பரப்பு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இவற்றுடன் வனப்பகுதிக்கான 26 ஆயிரத்தி 417 ஹெக்டேயர் நிலப்பரப்பு உள்ளடங்களாக 44 ஆயிரத்தி 152 ஹெக்டேயர் நிலப்பரப்பு இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஏ தரத்திலான 24.5 கிரோ மீற்றர் நீளமான பிரதான வீதியும், 58 கிலோ மீற்றர் நீயமான சந்தை வீதிகளும் 2 பாலங்களும் அமைக்கப்படவுள்ளதுடன் விவசாயிகள், பண்ணையாளர்கள், முதலீட்டாளர்கள், முயற்சியாளர்கள் உள்ளடங்களாக 5500 குடும்பங்கள் குடியேற்றப்படவுள்ளனர்.

மேலும் 10 கிராம மையங்கள், 3 குடி நீர் வசதி திட்டங்கள்கள், 220 கிரேலா மீற்றர் நீளமான யானை வேலி, 15 கி.மீ. நீளமான பிபுரத்தவ பிரதான வாய்க்கால், 83 கி.மீ. நீளமான பிரதான மற்றும் கிளை வாய்க்கால்கள், 600 கி.மீ. நீளமான விநியோக வாய்க்கால்கள் உள்ளடங்களாக இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடங்குகின்றன. இது தொடர்பான விபரங்களை மாதுரு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்ட பணிப்பாளர் நிலந்த தனபால தெளிவுபடுத்தினார்.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நடராசா நாகரத்தினம், மாதுரு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்ட வதிவிட பணிப்பாளர் சுகத் வீரசிங்க, பிரதி வதிவிட திட்ட முகாமையாளர் டபிள்யு.எம்.பீ. ஜனக உட்பட வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம்;, நீர் பாசண திணைக்கள உயர் அதிகாரிகள், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், வாகரை, கிரான், செங்களலடி பிரதேச செயலாளர்கள் மாதவனை, மயிலத்த மடு விவசாயிகள் பண்ணையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.