பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு நாளாந்தம் ஒரு முட்டையை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பேக்கரி உற்பத்திகளில் முட்டையின் விலை தாக்கம் செலுத்தும் விதம் குறித்து பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினரால் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், முட்டை உற்பத்தியில் ஏற்படும் அதிக செலவினங்கள் தொடர்பில் முட்டை உற்பத்தியாளர்கள் இதன்போது பிரதமரிடம் விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், நாட்டின் அனைத்து பேக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலையான மொத்த விலைக்கு முட்டையை பெற்றுக் கொடுப்பதற்கு முடியுமானதாக அமையும் என முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் இதன்போது குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இரு சங்கங்களுக்கும் இடையே இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ளுமாறு, உரிய தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.