நல்லை ஆதின குரு முதல்வருடன் கோத்தாபய சந்திப்பு

IMG 4618
IMG 4618

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வேன் என தம்மிடம் உறுதியளித்ததாக நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தந்திருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச முதலாவதாக நல்லூர் ஆலயத்திற்கு பின்பாக உள்ள நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றதுடன் அவருடன் கலந்துரையாடலில் ஈடுபடடார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் குரு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் சார்பாக களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய வெற்றியடைந்தால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக என்னிடம் உறுதியளித்துள்ளார். குறிப்பாக அரசியல் கைதிகளை சட்ட ரீதியாக விடுவிக்க முடியும் அதன் ஊடாக அவர்களை விடுவிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் வடக்கில் அபிவிருத்திகள் ஊடாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும். குறிப்பாக புதிய பாரிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதிகளவான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும். வேலைவாய்ப்புக்கள் இல்லாமையினால் தான் வடக்கில் உள்ள இளைஞர்கள் குழம்புகின்றனர். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் ஊடாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதை சுட்டிக் காட்டினார்.

அத்துடன் 5 தமிழ் தேசியக் கடசிகளின் 13 அம்சத் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் என்னிடம் கூறினார். அப்போது நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேச வேண்டும் என்பதை கோரினேன். அத்துடன் இது தமிழ் மக்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கின்றது. மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர் என்று நான் கூறியிருந்தேன் என்றார்.