இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்டி நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து அறிக்கையொன்றை பதிவுசெய்யுமாறு , பரிசோதனைகளுக்காக நியூ டயமன்ட் கப்பலிலுள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறு கடற் பாதுகாப்பு அதிகார சபைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இரண்டு தடவை தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் உட்பட பணியாளர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சென்றிருந்ததுடன் விசாரணை அறிக்கையொன்றையும் பெற்றுக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.