அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று (14) ஆரம்பிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலில் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 இராணுவ நிலையங்களில் இந்தப் பயிற்சிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றன.
ஐந்து கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும். ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் வீதம் 5 மாதங்களுக்குள் 50,000 பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்படவுள்ளது.
மாவட்டங்களின்படி பங்கேற்கும் பட்டதாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படுவதன் ஊடாக அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.