பால் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்தி இலக்குகளை விரைவாக அடைவதன் அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பால் தேவையில் வருடத்திற்கு 40 வீதத்திற்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சத்தான பாலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்கள் இழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் பால் வகைகளை உற்பத்தி செய்வது குறித்து ஆய்வுகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மனித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் திரவ பால் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்ளூர் விவசாயிகளின் பங்களிப்புடன் அரச மற்றும் தனியார் ஆகிய இருதுறைகளிலும் திட்டங்களை வகுக்குமாறு குறித்தும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் 15 தோட்ட நிர்வாகங்களுடன் இணைந்து 15 ஆயிரம் கறவை மாடுகளை வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதன்போது தெரிவித்துள்ளார்.