பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவரான ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு – ஹூனுப்பிட்டி கங்கராம விகாரையில் வழிபாடாற்றிய பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வருவதே எனது இலக்கு. கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க சம்பந்தப்பட்ட அனைவருடனும் நான் உரையாடுவேன்.
உதவித் தலைவர் ரவி கருணாநாயக்கவுடன் பேசி கட்சியின் நலனுக்காக அவரின் ஆதரவையும் பெறுவேன். அவர் கட்சிக்கு அதிகம் உழைத்தவர் அவரின் சேவை எமக்குத் தேவை – என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.