வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிசார் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் இருந்து யாழ் நல்லூர் வரையிலான நடைபயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணியினால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் பொலிசார் அதற்கு தடைவிதித்துள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் குறித்த நடைபயணம் இன்று இடம்பெறவில்லை.
இந்நிலையில் இன்று காலை முதல் பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாகவும் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளிலும் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .
எனினும் இது குறித்து பொலிசாரிடம் வினவிய போது இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச இன்றையதினம் வவுனியா நகரசபை மண்டபத்திற்கு வருகை தருவதினால் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .