20வது குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை! – அரசாங்கம்

download 1 2
download 1 2

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி டயானி மென்டிஸ் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றும்போது இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது :-

“நாடாளுமன்றத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்படும் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஜனநாயக நiடைமுறைகளின் பின்னர் விவாதங்கள் இடம்பெறும். இதன்போது இதனுடன் தொடர்புபட்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

இதன்காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் 20ஆவது திருத்தம் குறித்த கருத்து தேவையற்றது. அனுமானத்தின் அடிப்படையில் முன் தீர்ப்பை எவரும் வழங்கக்கூடாது.

முன்னாள் இராணுவ சார்ஜன்ட்டுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு இலங்கை அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது என்பதை இலங்கை அரசு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள போலியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிக்கின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மையை இலங்கை அரசு தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறிப்பாக உள்நாட்டுப் போரின் இறுதித் தருணங்கள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு போன்ற உள்நாட்டுக் குழுக்கள் ஆராய்ந்துள்ளன. அந்தக் குழுக்களால் இந்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எவற்றையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதை அரசு மீள வலியுறுத்த விரும்புகின்றது எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .